Tuesday, July 9, 2019


 

                       நானும்,ஜெயனும்,திருச்சியும்.
          

இன்று அவன் மரணமடைந்த செய்தி கிடைத்தபோது நான் நொறுங்கிபோனேன்.கடந்த சில ஆண்டுகளில் நான் இழந்த சொந்தங்கள் அநேகம் .வாப்பா ,உம்மா ,மூத்த சகோதரர் ,சகோதரிகள் என்று, பாதிப்பேருக்குமேல் போய்சேர்ந்துவிட்டார்கள் . அவர்களின் இழப்பிலிருந்து மீண்டுகொண்டிருந்த நேரமிது . மனைவியும் மகளும் அவர்களின் பிரிவின் துயரை மறக்கச்செய்து கொண்டிருக்கிற நேரம் . எனக்கு அதிகம் நண்பர்கள் எப்போதுமே கிடையாது . என் வாழ்நாள் முழுதும் இருந்த எனது நண்பர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் . இப்படி அபூர்வமான எனது நண்பர்களில் ஜெயன் முதன்மையானவன்.

அன்று வகுப்பில் மாணவர்கள் சிலர் ஆங்கில கவிதையை சரியாக மனப்பாடம் செய்யவில்லை . அதற்காக  நாங்கள் பகல் சாப்பாட்டிற்கு அனுப்பப்படவில்லை . இரண்டு மணிக்கு மதிய வேலை ஆரம்பமானதும் , அடுத்து வந்திருந்த அறிவியல் ஆசிரியர்  சாமியல் சார்  நாங்கள் தனியாக புத்தகங்களை கையில் வைத்துக்கொண்டு நிற்பதை பார்த்து காரணம் கேட்டார் . காரணம் சொன்னதும் ,சரி போய் சாப்பிட்டுவிட்டு வாருங்கள் என்று அனுப்பிவைத்தார் . ஆனால் எனக்கு சாப்பாடு கொண்டுவரும் கூடைகார அம்மா , நான் வராததால் ஏற்கனவே போய்விட்டார்கள் .என்னிடம் வெளியில் சாப்பிட காசும் இல்லை . வீட்டிற்குபோனால் நேரம் ஆவதுடன் ,வாப்பாவுக்கு காரணம் தெரிந்து அவர் தண்டிப்பார் . ஆகவே பசியோடு இருந்து விட முடிவு செய்தேன் . அந்த தூங்குமூஞ்சி மரநிழலில்  தண்ணீர் குழாயில் தண்ணீர் குடித்துவிட்டு சாமியல் சார் கொடுத்திருந்த ஒரு மணி நேர அவகாசம் முடிவதற்காக காத்திருந்தேன் . அந்த நேரத்தில்தான் ஜெயனின் நட்பு கிடைத்தது.அதுவரை ஒரே வகுப்பில் இருந்தாலும் அறிமுகம் இல்லாமல் இருந்தோம் . ஏன் சாப்பிடபோகவில்லையா ? என்று கேட்டான் .ஏற்கனவே கூடைகார அம்மா போய்விட்டதையும் , வீடு காந்தி மார்க்கெட் பக்கம் இருப்பதால் போய்வர நேரமாகலாம் என்றும் சொன்னேன் . சரி எங்கள் வீட்டிற்கு வா .எங்கள் வீடு சமஸ்பிரான் தெருவில்தான் இருக்கிறது என்றான் . வேண்டாம் எனக்கு பிரச்சினை இல்லை என்றேன் . அவன் விடவில்லை .பசியாகவா இருக்கப்போகிறாய் என்று கட்டாயப்படுத்தி அழைத்து சென்றான் . அவன் அம்மா விஷயம் அறிந்து இருவருக்கும் பரிமாறினார் .அன்று ஆரம்பமானது எங்கள் நட்பு .


அது 1961ம் ஆண்டு.ஊரிலிருந்து படிப்பதற்கு திருச்சிக்கு வந்தோம்.தந்தை திருச்சி ராணித்தெரு வீட்டில்இருந்தார்கள்.என்னோடு என் தம்பி மற்றும் எனது உறவினர் பிள்ளைகள் என்று மொத்தம் எட்டுப்பேர் வந்தோம்.ஊரில்  நாங்கள் சரியாகப்படிக்கவில்லை என்ற பொதுவான குற்றச்சாற்றின் பேரில் திருச்சியில் எங்கள் படிப்பை தொடர முடிவு செய்தார்கள்.முதலில் நாங்கள் எல்லோரும் தெப்பக்குளத்தின் அருகில் உள்ள அந்த பிரபலமான பள்ளியில் சேர்வதற்காக விண்னப்பித்திருந்தோம்.நுழைவுத் தேர்வு நடந்தது.அதில் நான் மட்டும் அந்த  பள்ளியில் சேர்ந்தேன்.மற்றவர்கள் இடம் கிடைக்காததால் மற்ற பள்ளிகளில் சேர்ந்தார்கள்.நான் அப்போது III பாஃர்ம் என்று அழைக்கப்பட்ட,8ம் வகுப்பில்,சேர்ந்தேன்.எனக்கு 8ம் வகுப்பு ஆசிரியராக வில்லியம்  இருந்தார்.அவருக்கு முஸ்லிம்களை பிடிக்கவில்லை.மிகவும் கடுமையாக நடந்து கொண்டார்.ஆனால் மற்ற ஆசிரியர்கள் கிறித்தவர்களுக்கே உரிய அன்போடு பழகினர்.எனக்கு புதிய இடம்,புதிய சூழல்,மற்றும் கடுமையாக நடந்து கொள்ளும் ஆசிரியர் ஆகியவை மிகவும் அச்சமூட்டுவதாக இருந்தது.பள்ளியில் இப்படி இருக்க வீட்டிலும் மிகவும் கடுமையான சூழல்.மற்றவர்களுக்கு நல்ல பள்ளிகளில் இடம் கிடைக்காத நிலையில் வீட்டின் அருகில் இருந்த சிறிய பள்ளியில் சேர்ந்தார்கள்.நாங்கள் எல்லோரும் காலையில் 4 மணிக்கே எழுந்துவிட வேண்டும்.வீட்டில் மொத்தம் 35 பேர் இருந்தோம்.அதாவது எங்கள் நான்கு கடைகளில் வேலை செய்தவர்களும் அடக்கம். காவிரிக்கரையில் இருந்தபோதும் கோடைகாலங்களில் தண்ணீர் பஞ்சம்தான் .அத்துனை பேரும் குளிப்பதற்கு அந்த வீட்டில் தண்ணீர் பற்றாததால் காலையில் நாங்கள் 4மணிக்கே எழுந்து காலை தொழுகையை முடித்துவிட்டு துண்டு உடைகள் எடுத்துக்கொண்டு 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தந்தையின் நண்பர்  வீட்டிற்கு குளிக்கச் செல்வோம்.பாதி தூக்கம்,அசதியுடன் அங்கு போய் சேருவோம்.என் தம்பி எழுந்ததுமே தூங்கி வழிவான்.தம்பி எழுந்தஉடன் கழிவறையில் போய் அங்கு தூங்கிகொண்டே காலைக்கடனை முடிப்பான்.பின்பு குளிக்கும்  வீட்டிற்கு வந்தபின் அங்குள்ள குளியல் அறை படிகளில் தூங்குவான்.ஒருவாறு குளித்துவிட்டு வீடுவந்து சேர்வதற்குள் விடிந்திருக்கும்.பிறகு குரான் ஓதுவோம்.கடையில் வேலை செய்யும் காசிம்  எங்கள் எல்லோருக்கும் ஓதச்சொல்லித் தருவார்.தொழுகைமுறை,கலிமாஆகியவையும் கற்பிப்பார்.8மணியானதும் காலை உணவு சாப்பிடச்செல்வோம். அத்தனை பேருக்கும் ஒரே சமையல்தான்.அவருக்கு உதவிக்கு முகைதீன் இருந்தான் .அவனுக்கு என் வயது இருக்கும் ..காலை உணவிற்கு பிறகு பள்ளிக்கூட புத்தகப்பையை எடுத்துக்கொண்டு,தந்தை இருக்கும் செயற்கை வைர கடைக்கு வந்து அங்கு உட்கார்ந்து படிக்க வேண்டும்.அவர்  கடைக்கு வந்ததும் 9மணியளவில் நாங்கள் பள்ளிக்குப் போக அனுமதி தருவார்.நான் பள்ளிக்கு நடந்து போவேன்.பள்ளி தெப்பக்குளத்திற்கு அருகில் இருக்கும்.பள்ளியின் புதிய சூழல்,வகுப்பு ஆசிரியரின் கடுமை,எல்லாம் பெருத்த சுமையாக இருக்கும்.கிராமத்திலிருந்து வந்த எனக்கு,பாடங்கள் கடினமாக இருந்தது.இருந்த போதிலும் வகுப்பில் சுமாரான மானவனாக இருந்தேன்.இத்தனை கஷ்டங்கள் இருந்த போதிலும்,இளம் வயது காரனமாக எதுஉம் பெரிதாக தெரியவில்லை.சிறு சிறு சந்தோசங்கள்கூட பெரிதாக தெரிந்தது.ஆரம்பத்தில் பகல் உணவிற்கு,நான் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு போவேன்.ஒருமுறைசாப்பிட்டுச்செல்ல நேரமாகி வகுப்பில் தண்டனை பெற நேர்ந்தது.அப்போது முதன்முறையாக பள்ளிக்கு பகல் உணவு அனுப்பும்படி போராடினேன்.முதலில் மறுத்த தந்தை ,பின்பு சம்மதித்து,கூடைக்காரர் மூலம் சாப்பாடு பள்ளிக்கு வந்தது. வீட்டிலிருந்து ஒரு வெங்கல டிபன் கேரியரில் பகல் உணவு சாப்பாட்டு கூடை ஆள் கொண்டு வருவார்.சாப்பாட்டு நேரத்தில்,சாப்பிட்ட நேரம்போக,கொஞ்சம் விளையாட நேரமும் கிடைத்தது.மாலையில் பள்ளி 4.30 மணிக்கு முடிந்ததும்,5மணிக்கு வீட்டில் இருக்க வேண்டும் என்பது வாப்பாவின் கட்டளை.எனக்கும் எல்லோறையும் போல் விளையாட ஆசை.ஆனால் 5மணிக்கு வீட்டில் இருக்க வேண்டும் என்பதால் விளையாட முடியாமல் ஆசையை அணை போட்டுவிட்டு வீட்டிற்கு வருவேன்.சில சமயத்தில் வரும் வழியில் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்ததில் நேரமாகி வீட்டில் உதைவாங்கியதும் உண்டு.திருச்சியில் நடைபாதைகளில் பல விதமான வேடிக்கைகள் நடக்கும்.தேள்,பாம்பு,போன்றவற்றை வைத்துக்கொண்டு,விஷ கடிகளுக்கு மருந்து இலவசமாக தருவதாக கூறி பணம் பறிக்கும் கும்பல்,சுலபமாக ஜெயித்து விடலாம் என்று நம்பிக்கையூட்டி,ஏமாளிகளிடம் பணம் முழுவதையும் பிடிங்கிக்கொள்ளும் நாடாக்குத்து சூதாட்டக்காரர்கள்,திராவிட இயக்க பாடல்களை பாடும் தெருப்பாடகர்கள்,சிறு சிறு வித்தைகள் காட்டும் கலைக்கூத்தாடிகள்,என்று பல விதமான தெருக்கவர்ச்சிகள்தான் எனக்கு பொழுதுபோக்காக இருந்தன.அவற்றில் மிகவும் நான் கவரப்பட்டது,ஹிப்நாடிசம் செய்வதாக விளக்கம் அளித்து கருப்பு துணியால் ஒரு சிறுவனை மூடி,அவன் ஹிப்நாடிசம் மூலம் பதில் அளிப்பான் என்று கூறி,சாலையில் செல்லும் வாகனங்களின் எண்கள் முதல் பார்வையாளர்களின் சட்டைப்பையில் இருக்கும் பொருட்கள் வரை சொல்லவைப்பது ஒன்று.அப்போது நான் ஹிப்நாடிசம் மூலம் அவற்றை சாதிக்க முடியும் என்று நம்பினேன்.அதுவே பின்பு என்னை ஹிப்நாடிசம் பற்றி அறிந்து கொள்ள அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி அது பற்றி படிக்க ஈடுபாடு ஏற்பட்டது.
5
மணிக்கு வீட்டிற்கு வந்ததும் கொஞ்ச நேரம் இருட்டும் வரை மொட்டை மாடியில் நிற்கலாம்.அதற்குள் லுஹர்(பகல்)அஷர்(மாலை)தொழுகைகளை முடித்திருக்க வேண்டும்.மொட்டை மாடியில் அந்த மாலை நேரக்காற்றை அனுபவித்ததும் அந்த காலகட்டத்தில் சந்தோசமான நேரங்கள்.சந்தோசம் என்ன என்று அறியாத காலத்தில் அவைதான் சந்தோசங்கள்.
இன்றும் திருச்சி என்று நிணைக்கும்போது சிறு சிறு கோயில்களிலிருந்து வரும் கற்பூரம் கலந்த பூ வாசனை,மாலையில் கடைகளில் வாசல் தெளிக்கும் போது வரும் மண் வாசனை,திறந்த சாக்கடை நாற்றம்,குளோரின் அதிகம் கலந்த குலாய் நீர்,கரை புரண்டு ஓடும் காவேரி,பழங்கால பாணி சினிமா அரங்குகள்,அந்த பெரிய காந்தி மார்கட் ஆகியவைதான் நினைவில் வரும்.
திருச்சியை பொருத்தவரை எனக்கு நன்பர்கள் அதிகம் இல்லை.அதற்கு என் தனிமை விருப்பமே காரணம்.வீட்டில் என் தம்பியை விட சிராஜ்ஜுடன் அதிகமான நட்புடன் இருந்தேன்.எனக்கும் அவனுக்கும் இரண்டு மூன்று வயது வித்தியாசம் இருந்த போதிலும்,அதிக நட்புடன் நடுவயது வரை தொடர்ந்தது.பின்பு ஏற்பட்ட சில சம்பவங்கள் எங்களை சற்று தள்ளி இருக்க செய்தது.இருந்த போதிலும் அந்த நட்பை நான் என்றும் மறந்ததில்லை. எனக்கு அனுமதிக்கப்பட்ட அந்த சில சமயங்களில் நான் அதிகம் கழிக்கும் இடம் ஜெயனின் வீடுதான்.அவன் தாயார் மிகவும் அன்பானவர். தன் சொந்த மகனைப்போல் அன்பாக இருப்பார்கள்.அவன் வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கும்.வெலிங்டன் தியேட்டர் பின்புறம் இருக்கும் ஸ்டோர் என்று சொல்லப்படும் பல பகுதிகளாக வாடகைக்கு இருக்கும் பல குடும்பங்கள் வசிக்கும் பழமையான கட்டிடம்.அது அவர்களின் பூர்வீக சொத்து என்று நினைக்கிறேன்.அவனுடைய மாமாவின் குடும்பமும் ஒரு பகுதியில் இருந்தார்கள்.ஜெகனின் ஸ்டோரின் மொட்டை மாடியில் ஓலை கொட்டகை போட்டிருப்பார்கள். தேர்வுகாலங்களில் அங்குதான் கம்பயின் ஸ்டடி பண்ணுவோம். ஜெகனும் படிப்பில் சுமார்தான். எங்கள் வகுப்புத்தோழன்  விஜயனும் கம்பயின் ஸ்டடிக்கு சேர்ந்து கொள்வான். விஜயன்தான் வகுப்பில் பர்ஸ்ட் ரேங்க் . இருபதிற்குமேல் ரேங்க் வாங்கிகொண்டிருந்த நாங்கள் , பத்து ரேங்குகளுக்கு அருகில் நானும் ஜெயனும்  வந்தது விஜயனுடன் சேர்ந்து கம்பயின் ஸ்டடி  பண்ணியதுதான் காரணம். விடுமுறை தினங்கள் ஜெயன் வீட்டிலேயே பொதுவாக கழியும். தாயார் ஊரில், தந்தையின் கடுமையான கட்டுப்பாடுகள் ,இவற்றிற்கிடையில் சந்தோஷமான கணங்கள் ஜெகனின் வீடுதான். அவனுடைய தந்தை சிறுவயதிலேயே விபத்தொன்றில் மறைந்துவிட, அவனுடைய தாய் மாமாவின் பாதுகாப்பில் அவன் குடும்பம் இருந்தது . அவன் மாமா மகன்கள், ஜெகனின் தம்பிகள், அந்த ஸ்டோரில் இருந்த மற்ற பையன்கள் ,மற்றும் ஜகன் தெருவில் இருந்த பையன்கள் என்று பெரிய கூட்டமே மொட்டை மாடியில் பட்டம் விடும் காலங்களிலும், தேர்வு காலங்களிலும் கூட்டம் சேருவோம். எல்லோருக்கும் ஜெயன்தான் தலைவன். அத்தனை கூட்டத்திலும் ஜெயனைத்தவிர மற்றவர்களோடு நான் அதிகம் ஒட்டவில்லை. அதற்கு என்னுடைய இண்ட்ரோவெர்ட் குணம் காரணமாக இருக்கலாம் . பொதுவாக பட்டம் விடும்காலம் டிசம்பர் மாதத்தில் வரும். அது அறையாண்டு தேர்வு காலமாக இருக்கும். அப்போது கம்பயின் ஸ்டடி நடக்கும் .தேர்வுகள் முடிந்ததும் பட்டம் விடும் காலம் ஆரம்பித்துவிடும்.மாமாவின் மகன்கள்,ஜெயனின் தம்பிகள்,மற்றும் அந்த ஸ்டோர் முழுவதும் இருந்த பையன்கள் எல்லோருக்கும் ஹீரோ ஜெயன்தான்.பட்டம் விடும் காலம் வந்தால்,அவனுடைய ராஜ்யம்தான்.மாஞ்சா போடுவதுமுதல் பட்டம் விடுவதுவரை கலகலப்பாக ஜெயன் வீட்டு மொட்டை மாடியில் அவன் தலைமையில் நடக்கும்.ஜெயன் பட்டம் விட மற்ற எல்லோரும் அவனுக்கு உதவியாக பின்னால் இருப்போம்.ஒருவர் பட்டத்தை மற்றவர் அறுக்க கடுமையான போட்டி நடக்கும்.பொதுவாக மார்வாடிகளும் சிந்திகளும் அதிகம் செலவு செய்து பட்டம் விடுவதில் புதிய யுத்திகளை உபயோகித்து அதிக பட்டங்களை அறுத்து பட்டம் விடுவதில் முன்னனியில் இருப்பார்கள்.ஆனாலும் ஜெயன் அவர்களுக்கு சலைத்தவன் அல்ல.அது ஒரு போர்காலம் போல் இருக்கும்.தந்தையின் கட்டுப்பாடுகளால் நான் அதிகம் வாரநாட்களில் போகமுடியாது.இருந்தாலும் ஞாயிற்றுகிழமைகளிலும்,விடுமுறை நாட்களிலும், கிடைக்கும் அனுமதியில் அவனுடைய வீட்டில்தான் இருப்பேன். தந்தைக்கும் ஜெகனை தெரியும், பிடிக்கும் .அவன் வீட்டிற்கு போவதற்கு தந்தைக்கு சம்மதம்தான். ஆனால் அதிலும் பொதுவான நேரக்கட்டுப்பாடு உண்டு. என்ன ஆனாலும் வீட்டில் விளக்குபோடுவதற்குள் வந்துவிட வேண்டும். அறையாண்டு விடுமுறைக்கு மற்ற உறவு பிள்ளைகள் ஊருக்கு போய்விடுவார்கள் .தந்தை என்னையும் ,தம்பியையும் அப்போது ஊருக்கு அனுப்பமாட்டார் . ஊருக்கு போனால் சுற்றிக்கொன்று கெட்டுப்போய்விடுவோம்  என்பது அவர் எண்ணம். சிராஜும் ஊருக்கு போயிருப்பான் . அதனால் எதாவது சமாதானம் சொல்லி ஜெயன் வீட்டில் அந்த அரையாண்டு விடுமுறையை அதிகம் கழிப்பேன் .

சினிமாவுக்கு போவதில் தந்தையிடம் மிகுந்த கட்டுப்பாடு உண்டு .மாதம் ஒருமுறைதான் சினிமாவிற்கு போகமுடியும். ஒரு ஞாயிற்றுகிழமைகளில் 65 காசுகள் தருவார். அப்போது திருச்சியில் தியேட்டர்களில் கீழ் தளத்தில் பின்பகுதி வகுப்புக்கான டிக்கட்டின் விலை. ஆக குறைந்த டிக்கட் 35 காசுகள் என்று நினைக்கிறேன் .சினிமாவிற்கு போகுமுன்னால் தந்தை நேர்காணல் சென்சார் ஒன்று நடத்துவார். எந்த படத்திற்கு போகிறாய்? யார் நடிகர் ? எந்த தியேட்டர் என்ற விபரம் சொல்லவேண்டும் . சில நடிகர்களின் படங்களுக்கு  அனுமதி தரமாட்டார் .அவை ஆபாசமாக இருக்கும் என்பது அவர் அபிப்பிராயம் . சிவாஜி கணேசன் படம் என்றால் உடனே U சர்டிபிகட்தான். அனுமதி உடன் கிடைக்கும் . படம் பார்த்துவிட்டு திரும்பிவந்து டிக்கட்டை அவரிடம் காட்டவேண்டும் . அவரோடு சேர்ந்து நான் மூன்று படங்கள் பார்த்திருக்கிறேன். ஒன்று கற்பகம். அதில் வரும் ரங்கா ராவ் போன்ற தோற்றம் உடையவர் என் தந்தை . இப்போதும் தொலைகாட்சியில் ரங்கராவ் நடித்த பழைய படங்களை பார்த்தால் தந்தையின் நினைஉகளுக்கு போய்விடுவேன் . அடுத்தது தந்தையோடு  சென்னைக்கு முதல் முறையாக சென்றிருந்தபோது சாந்தி தியேட்டரில் அவரோடு பார்த்த சாந்தி படம், அடுத்தது மதுரையில் மருத்துவக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த என் மூத்த சகோதரரை பார்க்கப்போனபோது ,சிந்தாமணி தியேட்டரில் பார்த்த பாகப்பிரிவினை ஆகியவை மரணமடைந்து விட்ட அந்த இருவருடனும் நான் பார்த்த படங்கள். அந்த படங்களை சமீபத்தில் தொலைகாட்சியில்பார்த்தபோது அவர்களை நினைத்து அழுதுவிட்டேன்.

ஒருமுறை ஜெயன் வீட்டின் அருகில் இருந்த வெல்லிங்டன் தியேட்டரில் நீல வானம் படம் திரையிட்டிருந்தார்கள் .ஜெயனிடம் அதிகமாக டிக்கட் ஒன்று அந்த படத்திற்கு இருந்தது .அது ஒரு ஞாயிற்று கிழமைதான் . ஆனால் தந்தையின் உத்தரவில்லாமல் போகமுடியாது .சென்ற வாரம்தான் சினிமாவுக்கு சென்றிருந்ததால் ,அனுமதி கிடைக்காது ,ஆகவே கேட்டும் பயனில்லை .மேலும் சினிமாவிற்கு போகாத ஞாயிருகளில் வீட்டிற்கு இரவு 8 மணிக்குள் வந்துவிட வேண்டும் என்பது தந்தையின் உத்தரவு . அகவே ஜெயன் என்னை அழைத்தபோது மறுத்து விட்டேன் . ஜெகன் என்னை இடைவேளை வரை பார்த்துவிட்டு போகும்படி சொன்னான் .நானும் ஒத்துக்கொண்டுவிட்டு ,சைக்கிளை ,அவன் வீட்டில் விட்டு விட்டு படம் பார்த்தோம் . ஆனால் படத்தை என்னால் ரசிக்க முடியவில்லை .தந்தையிடம் பிடிபட்டுவிடுவோமோ என்ற பயம்தான் .இடைவேளையில் நான் சைக்கிளை எடுத்துக்கொண்டு விட்டிற்கு புறப்பட்டேன் .இன்னும் ஒரு சில நிமிடங்கள்தான் இருந்தது 8 மணிக்கு . அப்போது ஜெயன் சொன்னான் . வீட்டில் போய் தலையை காட்டிவிட்டு சாப்பிட்டுவிட்டு வேகமகவந்துவிடு மீதிபடத்தையும் பார்க்கலாம் என்றான் . அதற்கு வசதியாக அவன் வீடும் இருந்தது .அவன்வீடு வெல்லிங்டன் தியேட்டரை ஒட்டி இருந்தது .அவர்கள் வீடு கொல்லை வழியாக தியேட்டர் உல் பகுதிக்கு போய்விடலாம் .எனக்கும் முழு படத்தையும் பார்த்துவிட வேண்டும் என்று விருப்பம் இருந்தது . அதேபோல் வீட்டிற்குபோய் வாப்பாவிடம் தலையை காட்டிவிட்டு ,அவசரம் அவசரமாக இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு திரும்பவும் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஜெயன் வீட்டின் வழியாக

தியேட்டருக்கு வந்து மீதி படத்தையும் பார்த்தேன் . ஆனால் தந்தை நான் சாப்பிட்டபின் அவசர அவசரமாக வெளியே சைக்கிளில் போனதை தந்தை பால்கனியிலிருந்து பார்த்துவிட்டார் .இது அறியாத நான் 10மணிக்கு வீட்டுக்கு வந்தபோது தந்தை பால்கனியில் நின்று பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்ததும் என் எனக்கு வேர்த்துகொட்டிவிட்டது .பிறகு தந்தையின் அந்த பெல்ட் அடி . தந்தையை அவருடைய இத்தகைய கடுமையான தண்டனைகளுக்காக நான் அவரை ஒருபோதும் வெறுத்ததில்லை .அந்தகால தந்தைமார்களுக்குள்ள நம்பிக்கைகள் அவருக்கும் இருந்தது . பிள்ளைகளை அடித்துத்தான் திருத்தமுடியும் என்று நம்பினார்கள் .ஆனால் அன்பு என்பது குறைந்ததல்ல .அந்த கடுமையான தண்டனைகளே அந்த அன்பின் அன்றைய கால வெளிப்பாடுதான் .

PUC வரை திருச்சியில் ஒண்றாக நாங்கள் படித்தோம் .அதன் பின் பட்டப்படிப்பிற்கு நான் சென்னை போனபின், எங்கள் பிரிவு ஆரம்பமானது . கடிதங்களில் எங்கள் நட்பு தொடர்ந்தது . பின்பு இந்த ஐம்பது ஆண்டுகளில் எத்தனை மாற்றங்கள். இடையில் பத்து ஆண்டுகள் எங்கிருக்கிறோம் என்ற விபரமே இல்லாமல் இருந்தோம் . அதற்கு காரணம் ஏன் வாழ்வில் ஏற்பட்ட தோல்விகளும் , ஏமாற்றங்களும்தான் காரணம் . அந்த நிகழ்வுகள் அவனை பாதிக்கவேண்டாம் என்று எண்ணியே அந்த காலகட்டங்களில் அவனை தவிர்த்தேன் .அந்தக்காலங்களில் மும்பை, சவுதி , சிங்கபூர் என்று வாழ்வின் நீரோட்டத்தில் பல இடங்களுக்கு ஓடிக்கொண்டிருந்தேன் . நான் செய்துவந்த தொழில் நஷ்டம் , தோல்வி ,தொடர்ந்த தொழில் வேலை மாற்றங்கள் என்று பல கஷ்டங்கள் . அதன் பின் நான் 1998 இல் துபாய் வந்தேன். சிட்டி சென்டரில் கேஸ் கௌண்டரில் ஒரு கை ஓங்கி அறைந்தது .கோபத்தோடு திரும்பிபார்த்தால் ,ஜெயன் . சந்தோசத்தில் ஏறக்குறைய அழுதுவிட்டோம் .பத்தாண்டு நிகழ்வுகளை மால் பெஞ்சில் பகிர்ந்துகொண்டோம் .எனக்கு ஏற்பட்ட துன்ப அனுபவங்களை தெரிவிக்காததர்காக கோபித்துக்கொண்டான் . வீட்டிற்கு வரும்படி அழைத்தான் .அடுத்த வெள்ளிக்கிழமை வார விடுமுறையில் வருவதாக சொல்லி பிரிந்தேன் . நான் ஷார்ஜாவில் இருந்தேன் .தினமும் போனில் பேசிக்கொள்வோம் . அடுத்த வெள்ளிக்கிழமை துபாயில் அவன் வீட்டிற்கு போனேன் . திருச்சியில் அவன் கல்யாணத்தில் பார்த்த அவன் மனைவியை அறிமுகம் செய்துவைத்தான் . அவன் மகளையும் அறிமுகம் செய்தான் . மகளும் துபாயில் நல்ல வேலையில் இருந்தாள். மகளுக்கு வரன் பார்த்துக்கொண்டிருப்பதாக சொன்னான் . மகளுக்கு வயது 30 நெருங்குவதையும் ,பல வரன்கள் தட்டிபோவதையும் வருத்தப்பட்டான் . பின் ஒவ்வொரு வெள்ளியும் அவன் வீட்டிற்கு போவேன் . மாலையில் வா வெளியே போவோம் என்றான்  . அப்போது அவன் மனைவியின் முகம் சுருங்குவதை கண்டேன் . என்னை பாருக்கு அழைத்து சென்றான் . நான் குடிக்க மாட்டேன் என்பது அவனுக்கு தெரியும் . எனக்கு ஆப்பிள் ஜூஸ் ஆர்டர் செய்துவிட்டு அவனுக்கு மதுபானம் ஆர்டர் செய்தான் . அவன் மிதமாக குடித்தாலும் அது எனக்கு பிடிக்கவில்லை . நான் முதன் முதலில் PUC இல் சேர்ந்தபோது அப்போது கிடைத்த வகுப்பு தோழர்களுடன் சேர்ந்து புகை பிடிக்க ஆரம்பித்தேன் . அப்போதுகூட அவன் அதை தொடாததோடு  ,என்னையும் கண்டித்தான் . புகைப்பழக்கம் எனக்கு 40 வயதில் சர்க்கரை நோய் வரும்வரை தொடர்ந்தது . அவனுக்கு அந்த பழக்கம் ஏற்படவே இல்லை .அப்படிப்பட்டவன் மதுப்பழக்கத்திற்கு ஆளானது எனக்கு ஆச்சரியம்தான் . எந்த கெட்டபழக்கமும் இல்லாத அவனுக்கு இது எப்படி ஏற்பட்டது . அவனிடம் கேட்டேன் . எல்லாம் துபாய் வந்தபிறகுதான் என்றான் . மகளுக்கு வரன் கிடைக்காதது , துபாய் வாழ்வின் மன இருக்கங்கள் , அலுவல் சம்பந்தமான பார்டிகள் ஆகியவைதான் மதுப்பழக்கத்திற்கு காரணம் என்றான் . இருந்தாலும் நான் அந்த பழக்கத்தை அங்கீகரிக்கவில்லை .விட்டுவிடும்படி சொன்னேன் . அதிகம் குடிப்பதில்லை என்றும் விடுமுறை அன்று மட்டும் குடிப்பதாக சொன்னான் . அவன் வீட்டிற்கு வந்ததும் ,அவன் மனைவி அவன் குடிபற்றி முறை இட்டார் .சமீபத்தில் இருதய அறுவைசிகிச்சை செய்திருப்பதாகவும், மேலும் சர்க்கரை ,ரத்தகொதிப்பு போன்றவற்றிற்கு மருந்துகள் எடுத்துகொள்வதாகவும் சொன்னார் . நானும் அவனுக்கு குடியை நிறுத்திவிடும்படி சொன்னேன் .அனால் அவன் விடுவதாக இல்லை .
 பின்பு வார நாட்களிலும் குடிப்பதாக அவன் மனைவி சொன்னார் . நான் எவ்வளவோ அறிவுரை  சொன்னேன் . கேட்கவில்லை .அவன் வேலையும் போய்விட்ட நிலையில் திருச்சிக்கு போய்,அங்கு செட்டில் ஆக முடிவு செய்தனர் . மகளுக்கு வரன் அமையாததே பெரிய கவலை என்று சொன்னான் . கடவுள் சீக்கிரம் ஒரு நல்ல வரனை கொடுப்பார் கவலைபடாதே .அதற்காக குடிக்காதே .அது தீர்வல்ல என்று அறிவுரை சொல்லி அனுப்பினேன் .
பிறகு எங்கள் நட்பு தொலைபேசியில் தொடர்ந்தது .அடிக்கடி பேசிக்கொண்டோம் .அவன் மனைவி இப்போது குடி அதிகமாகி விட்டதாகவும் ,நண்பர்களோடு சேர்ந்து குடிக்கிறார் ,கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் சொன்னார் . அந்தநேரத்தில் நல்ல செய்தியும் வந்தது . அவன் மகளுக்கு நல்ல வரன் வந்ததுதான் . அமெரிக்க மாப்பிள்ளை .விரைவில் திருமணம் நடந்து மகள் கணவனோடு அமெரிக்க சென்றுவிட்டாள். ஜெயன் இப்போது நிம்மதி அடைந்ததாக சொன்னான் . பின்பும் குடியை நிறுத்துவதாக தெரியவில்லை .இப்போது மகளின் பிரிவிற்காக குடிப்பதாக சொன்னான் . அவன் துணைவியார் ஒருபள்ளியில் ஆசிரியையாக இருந்தார் . அவன் வீட்டில் தனிமை மற்றும் ரிடையர் வாழ்கை போரடிப்பதாகவும், அதற்காக குடிப்பதாகவும் புதிய காரணம் சொன்னான் .
பின்பொருநாள் அந்த தொலைபேசி அழைப்பு வந்தது .அவன் மனைவிதான் பேசினார் . குடித்துவிட்டு வீதியில் மயங்கி விழுந்து விட்டதாகவும் , மருத்துவமனையில் ஐ சி யு வில் இருப்பதாகவும் சொன்னார் . தினமும் அவன் உடல்நிலை விசாரித்துக்கொண்டிருந்தேன் .இருபதுநாட்களுக்கு பிறகு வீடுதிரும்பிவிட்டான் என்ற பின் நிம்மதி பிறந்தது ..
அந்த நிம்மதி சீக்கிரமே போய்விட்டது வீட்டிற்கு வந்த சில நாட்களில் வாதம் அடித்து கண்பார்வையும் போய்விட்டது . பேச்சும் குழறியது . ஆறுமாதத்தில் அவன் ஓரளவு நடமாட்டத்துடன் பேச்சும் வந்தது .ஆனால் கண்பார்வை முழுமையாக போய்விட்டது . இந்த காலகட்டங்களில் என்னால் ஊருக்குவரமுடியாமல் போய்விட்டது .ஆனாலும் அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொண்டோம் .சீக்கிரம் வரும்படி சொல்வான் . விரைவில் வருவதாக சொல்வேன் .ஆனால் இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டது .

சென்ற டிசம்பர் விடுமுறையில் இந்தியா சென்றிருந்தபோது,திருச்சிக்குப்போய் அவனைப்பார்த்து வந்தேன்.என் துனைவியும் மகளும் உடன் வந்தனர்.சர்க்கரை நோயால் அவதிப்பட்டு,கண்பார்வை இழந்து அவன் துன்பப்படுவது என்னை மிகவும் காயப்படுத்தியது.எப்படி இருந்தவன்? அவனுடன் அவன் துனைவி மட்டும் இருந்தார்.அவனுடைய ஒரே மகள் திருமனமாகி யுஎஸ்ஸில்  இருக்கிறார்.அவன் துனைவியார் அருகில் உள்ள பள்ளிக்கு வேலைக்கு போய்விட்டபின் ,பகலெல்லாம் தனிமையில் கழிகிற அவன் வாழ்கையை நினைத்து மிகவும் வருந்தினேன்.அவன் மகள் குழந்தை உண்டாகி இருப்பதால், கோடை விடுமுறையில் அவன் துனைவியார் யுஎஸ்சிற்கு  செல்ல இருப்பதாகவும்,அப்போது அவனை மதுரைப்பக்கமுள்ள ஒரு ஊரில் முதியவர் இல்லத்தில் சேர்க்கப்போவதாகவும் சொன்னார்கள்.அது என்னை மிகவும் பாதித்தது.குடும்பங்கள் கூட்டுக்குடும்பங்களிலிருந்து மாறி அணுக்குடும்பங்களாகி மணிதனை தனிமைப்படுத்தி விட்ட அவலத்தை நினைத்து வருந்தினேன்.எங்களுக்கும் ஒரு மகள்தான் இருக்கிறாள்.அதிகம் பெற்றுக் கொள்ளாததற்காக வருந்தினேன்.என் மகளை அதிகப் பிள்ளைகள் பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டோம். பேரப்பிள்ளைகளையாவது அதிகமாக பார்க்க வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்.

அவனின் கடைசி நேரங்களில் யாரும் அருகில் இல்லை .மனைவி அமெரிக்காவில் இருந்தார் . முதியோர் இல்லம் போக மறுத்து தனிமையில் இருந்திருக்கிறான் . அடிக்கடி உரையூரிளிருக்கும் அவன் தங்கை வந்து பார்துக்கொண்டிருந்ததாகவும் சொன்னார்கள் . அந்த கடைசி நிமிடங்களில் யாரும்மில்லை . நேற்று  இரவுதான் நான் அவனுடன் பேசிக்கொண்டிருந்தேன் . பள்ளி நாட்கள் பற்றி பேசி சிரித்துக்கொண்டிருந்தோம் .காலையில் அவன் மனைவியின் அழைப்பு அந்த அதிர்ச்சி செய்தியை சொன்னது .


இழந்து விட்ட சொந்தங்களுக்கு ,மனைவியும் மகளும் மற்ற சொந்தங்களும் ஈடுசெய்கிரார்கள் .இந்த நண்பனின்  இழப்பிற்கு என்போன்ற தனிமை மனிதர்களுக்கு, யார் ஈடு செய்வார் ? சுகத்தையும் துக்கத்தையும் பகிர்ந்து கொள்ள நண்பன் வேண்டும் .


 
Buy